Friday, August 12, 2011

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் நாட்டு நடப்பு;

குழந்தைகளைப் படைப்பது கடவுள் சக்தி என்றால், குடும்பக்கட்டுப்பாடு செய்தபின் அவரால் படைக்க முடியுமா?

இப்படி ஒரு கேள்வி தங்களை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும்  வீரமணியாரின் 'விடுதலை' நாளிதழில் ஒரு கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. அதற்கு நாம், ''மாதவிலக்கு நின்ற பெண்கள் குழந்தை  பெறமுடியாது என்பதுதான் மருத்துவம் சொல்லும் உண்மை. ஆனால் மாதவிலக்கு நின்ற வயோதிகமடைந்த பெண் குழந்தை பெற்ற செய்தியெல்லாம் பத்திரிக்கையில் வந்ததை வீரமணியார் படிக்கவில்லையா? இறைவன் நாடினால் வயோதிகர்களுக்கும் குழந்தை தருவான். அவன் நாடினால் வாலிபனையும் மலடாக்குவான்.  குழந்தை  தருவது கடவுளின் செயல் அல்ல என்பது வீரமணியாரின் கொள்கை. அப்படியாயின் குழந்தையை  உருவாக்குவது மனிதன் என்றால், குழந்தை இல்லாத தம்பதிகள் எப்படி உருவாகிறார்கள்? எத்துனை வைத்தியம் பார்த்தும் குழந்தையே பிறக்காதவர்கள் வரலாறு வீரமணிக்கு தெரியாதா? இளமைப் பருவத்தில் இருக்கும் தம்பதிக்கு குழந்தை பேற்றை தடுத்த அந்த  சக்தி யார் என்று வீரமணியார் கூறுவாரா? என்று கேட்டிருந்தோம்.

நமது மேற்கண்ட கேள்விக்கு வீரமணியாரின்  தரப்பில் இதுவரை பதிலில்லை. இப்போது குழந்தை வேண்டாம் என்று குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டாலும், இறைவன் நாடினால் அதே தம்பதிக்கு மறு ஆபரேஷன் செய்யாமலேயே மீண்டும் குழந்தை பிறக்கச் செய்வான் என்ற செய்தி அதே வீரமணியாரின் 'விடுதலை' நாளிதழில் [05 -08 -11 ]வெளியாகியுள்ளது. 

''கும்பகோணத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. 2 குழந்தைகள் பிறந்த நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 1989இல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பம் அடைந்த சரஸ்வதிக்கு 1992 செப்டம்பரில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

மருத்துவர்கள் கவனக் குறைவால் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பிறந்ததாக கூறி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சரஸ்வதி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ரூ.1.25லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை முதல்வர், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக்  கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். மனுவில், ''குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில்  தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது. மனுதாரருக்கு அறுவை சிகிச்சை சரியாகத் தான் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை செய்யப்பட்டு 3 ஆண்டுக்கு பிறகு தான் குழந்தை பெற்றுள்ளார் என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ்,

''மனுதாரருக்கு குடும்ப கட்டுப் பாட்டு அறுவை சிகிச்சை சரியாக செய்யப்பட வில்லை. மருத்துவர்கள் கவனக்குறைவாக இருந்துள்ளனர். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரின் பதில் ஏற்ககூடிய தாக இல்லை. எனவே மனுதாரருக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நன்றாக கவனிக்க வேண்டும் மருத்துவம் சார்ந்தவர்கள் சொல்லும் ''குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில்  தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது'' என்ற கருத்தை மருத்துவத்துறை சாராத நீதிபதி ஏற்க மறுத்துத்தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.  அதுமட்டுமன்றி, அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை சரியாகத் தான் செய்யப்பட்டுள்ளது என்று கூறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை முதல்வர், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் கருத்தில்  கவனிக்க வேண்டியது ''குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில்  தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது' என்பதுதான். இதன் மூலம் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை முழுமையானது அல்ல என்பதும், இறைவன் தரவிருக்கும் குழந்தையை எந்த அறுவைச் சிகிச்சையும் தடுத்துவிடாது என்பதும், அதேபோல் இறைவன் மலடாக்க நினைக்கும் எவருக்கும் எந்த சிகிச்சையும் குழந்தையை தந்துவிடாது என்பதும் சந்தேகமற நிரூபிக்கப் பட்டுள்ளது.
 
இப்போது வீரமணியார் வகையறாக்கள் ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளில் எப்படி தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருவது போன்று, அறுவைச் சிகிச்சை செய்தவர்களிலும் தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருகிறான் இறைவன் என்பதுதான் அது.
 
இதைத்தான் இறைவனின் தூதர்[ஸல்] அவர்கள் பின்வரும் பொன்மொழியில் தெளிவான வார்த்தையில் சொல்லியுள்ளார்கள்;
 
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;
 
''நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல்(உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல்செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.[புகாரி]
 
என்னதான் மனிதன் தடுத்தாலும் இறைவன் உருவாக்க நினைக்கும் எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை என்ற நபியவர்களின் வாக்கை மேற்கண்ட அறுவைச் சிகிச்சை தோல்வி உணர்த்துகிறது. இதற்கு பிறகும் குழந்தையை உருவாக்குவது மனிதனே என்று நாத்திகர்கள் கூற வருவார்களானால் வயோதிக தம்பதியருக்கு குழந்தை பிறப்பதையும், இளம் தம்பதிகள் பலர் மலடாக இருப்பதையும், குடும்பக் கட்டுப்பாடு செய்தாலும் குழந்தை பிறக்கும் நிகழ்வுகளையும் முழுமையாக மாற்றிக் காட்டட்டும். இல்லையேல் குழந்தை தருவது கடவுளே என்ற கருத்தை  ஏற்க முரண்டு பிடிக்காமல் முன் வரட்டும்.

-முகவை அப்பாஸ் 

0 comments:

Post a Comment