Sunday, October 30, 2011

அனுமதிக்கப்பட்ட விசயத்தில் 'கை' வைக்க தயாராகிவிட்ட அண்ணன் ஜமாஅத்..?


அனுமதிக்கப்பட்ட விசயத்தில் 'கை' வைக்க 

தயாராகிவிட்ட அண்ணன் ஜமாஅத்..?



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் நிர்வாகத்தில் உள்ள ஒரு தொழுமிடத்தில் அரைடவுசர் போட்டு ஒருவன் பாங்கு சொல்ல, அதை சில சகோதரர்கள் சுட்டிக்காட்டியபோது அண்ணனை பின்பற்றுபவர்கள், அரைடவுசர் போட்டு பாங்கு சொல்ல தடையுண்டா? என்று அலறியதை இணையதள வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவர்களுக்கு தேவை என்றால் தடையுண்டா? என்பார்கள். அவர்களுக்கு தேவை என்றால் அனுமதியுண்டா? என்பார்கள். அவர்களுக்கு தேவை என்றால் மார்க்கத்தில் தடையில்லாத ஒன்றை தடுக்கும் நோக்கில் சிறந்ததை கையிலெடுப்பார்கள். அந்தவரிசையில் இப்போது இவர்கள் கையிலெடுத்திருப்பது திருமண விருந்து பற்றியதாகும்.

மார்க்கத்துக்கு முரணில்லாத வகையிலும் வீண்விரயம் இல்லாமலும் பெரும் பொருட்செலவில் அதிகமான மக்களுக்கு விருந்தளித்து நடத்தப்படும் திருமணங்கள் விஷயத்தில் அதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது அவரவர் சக்திக்கு உட்பட்ட விஷயம் என்ற ஒன்று அனைவரும் அறிந்ததுதான். இவ்வளவு காலமும் மண்டபத்தில் நடந்த பலநூறு பேர்களுக்கு விருந்தளித்த திருமணங்களை கண்டு கொள்ளாத அண்ணன் ஜமாஅத், இப்போது இந்த விசயத்தை வழக்கம் போல் 'மறு ஆய்வு'க்கு எடுத்து, கீழ்கண்டவாறு ஒரு புதிய ஃபத்வா வழங்கியுள்ளது.

''தனது சக்திக்கு உட்பட்டு ஒருவர் அதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது குற்றமாகாது என்றாலும் அது சிறந்ததல்ல. ஏனெனில் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணத்தையே நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அந்தக் காலத்தில் திருமணச் செலவு என்பது விருந்துச் செலவு மட்டும் தான். எனவே விருந்துக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்ப்பது தான் சிறந்தது எனினும், அனுமதிக்கப்பட்ட செயலுக்கு நாம் தடை போடவும் முடியாது. அனுமதிக்கப்பட்டதையும் சிறந்ததையும் சமமாகவும் கருத முடியாது என்ற அடிப்படையில்,

எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் எனும் பேரருள் அடங்கியுள்ளது என்பதாலும் அதைத் தான் மக்களுக்கு நாம் ஆர்வமூட்ட வேண்டும் என்பதாலும் ஏழை எளிய மக்கள் அதிகமாக உள்ள சமுதாயத்தில் நம்முடைய செயல்கள் ஏழைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற சமூக நலன் கருதியும்,
மார்க்கத்துக்கு முரணான எந்த அம்சமும் இல்லாமல் அதிகமான நபர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நடத்தப்படும் திருமணங்களை நம்முடைய பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த திருமணங்களில் பேச்சாளர்களை அனுப்பி திருமண உரை நிகழ்த்துவதில்லை.
மார்க்கத்திற்கு முரணில்லாத வகையிலும் விருந்துக்காக குறைந்த அளவு செலவிட்டும் நடத்தப்படும் திருமணங்களை நமது ஜமாஅத்தின் பதிவேட்டில் பதிவு செய்வதுடன் அந்தக் குடும்பத்தார் கேட்டுக் கொண்டால் திருமண உரை நிகழ்த்த பேச்சாளரை அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு திருமண விருந்தில் இந்த வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அண்ணன் ஜமாஅத்தின் மேற்கண்ட முடிவின் படி, மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்படா விட்டாலும், அதை விட சிறந்ததை கண்டால் அதைத்தான் கடைபிடிக்க வேண்டும். சிறந்ததை செய்வதற்குத் தான் ஆர்வமூட்ட வேண்டும் என்று தெரிகிறது. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதை விட சிறந்ததாக கூறப்பட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விசயத்தில் கடந்த  காலங்களில் அண்ணன் ஜமாஅத்தின் நிலை என்ன? சிறந்தவைகளுக்கு முன்னுரிமை கொடுத்ததா? இல்லை.

உதாரணத்திற்கு, தமிழகத்தில் பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதை ஊக்கப்படுத்தியது அண்ணன் ஜமாஅத். அதன் காரணமாக இன்றைக்கு அண்ணன் ஜமாஅத் நிர்வாகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பெண்கள் தொழ வரும் காட்சியைக் காணலாம். பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதை குறித்து மார்க்கத்தின் நிலை என்ன?

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
(இப்னு குசைமா, அஹ்மது 5211)
عنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ (سنن أبي داود)
உங்கள் பெண்களை பள்ளிவாயில்களை விட்டும் தடை
செய்யாதீர்கள். அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சிறந்ததாகும்.
(அபூதாவூத்)
 
பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீடுகளில்
 
தொழுவதே சிறந்தது
 
என மார்க்கம் சொல்லியிருக்க, இவர்கள் சிறந்தவைகளுக்கு
 
முன்னுரிமை
 
தருபவர்களாக இருந்தால், பெண்கள் அவர்களாகவே
 
பள்ளிக்கு வந்தால்
 
வரட்டும் என்று இருக்காமல் பெண்களை பள்ளிக்கு
 
அழைக்கும் நோக்கில்
 
பள்ளியில் தொழுவதை அழுத்தம் திருத்தமாக பேசியது
 
ஏனோ? பெண்களை
 
பள்ளிக்கு அழைப்பதில் காட்டிய வேகத்தை அவர்களுக்கு
 
சிறந்ததான
 
வீட்டில் தொழுமாறு
 
இவர்கள் ஊக்கப்படுத்தியதில் காட்டியதுண்டா?
 
குறைந்த பட்சம் இப்போதாவது, தங்களின் தவ்ஹீத்
 
பெண்கள் சிறந்ததை
 
செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் 'பெண்களே உங்கள்
 
வீடுகளில்
 
தொழுங்கள்; அதுதான் சிறந்தது' என்று அண்ணன் ஜமாஅத்
 
அறிவிக்குமா?
 
போராட்டக் களங்களில், மாநாடுகளில், பொதுக்கூட்டங்களில் 
 
பெண்கள் கலந்து கொள்வதை விட,
 
அவர்கள் வீட்டில் இருப்பதே மார்க்கத்தில்
 
சிறந்தது என்பதால், இனிமேல் தங்கள் போராட்டங்கள்-
 
மாநாடுகளுக்கு
 
பெண்களுக்கு தடை விதிக்குமா?
 
அதோடு, இனிமேல் எல்லா விஷயத்திலும் மார்க்கத்தில்
 
அனுமதிக்கப்பட்டதை விட,
 
சிறப்பித்துக் கூறப்பட்டதற்குத்தான் தான்
 
முன்னுரிமை என்று அறிவிக்கத் தயாரா?


--அப்துல்  முஹைமின் .

பஞ்ச் பட்டிக்காட்டான்!


காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேச்சு : தி.மு.க., குடும்பத்திற்காக நடத்தப்படும் கட்சி. கருணாநிதிக்கு கணுக்காலில் இருந்து தலை வரை மூளை. அவ்வளவு மூளையும் தன்னைப் பற்றியே சிந்திக்குமே தவிர, இந்த மண்ணைப் பற்றி சிந்திக்காது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அவரை  தமிழின தலைவர்னு சிலர் சொல்றதால, தன்னை பற்றி சிந்திப்பதே ஒட்டுமொத்த தமிழ் இனத்தை பற்றி சிந்திப்பதற்கு சமம் என்று நினைத்திருப்பார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே; "சில ஆண்டுகளுக்கு முன், அத்வானியை சந்தித்தபோது, நரேந்திர மோடியை, முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என, அவரிடம் வலியுறுத்தினேன்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இதுல ஒன்னும் ஆச்சர்யம்  இல்லையே? மோடியை பதவி நீக்கம் செய்யுங்கன்னு நீங்க சொன்னா அதுதான் ஆச்சர்யமான செய்தி.
 
சென்னை மாநகராட்சி மேயராகவிருக்கும் சைதை துரைசாமி; கடந்த மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இது உங்களுக்கே நியாயமா இருக்கா? ஏற்கனவே உங்க அம்மா செஞ்ச ஆய்வுல அத்துணை முன்னாள் அமைச்சர்களும் உள்ளே-வெளியேன்னு இருக்கிறாங்க. இதுல நீங்க வேறயா?
 
உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து;  ஆளுங்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், கடந்த காலத்தில் தி.மு.க. ஆளும் பொறுப்பை ஏற்றபோது உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி, அதில் பெருவாரியான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றி இருக்கிறோம்.
அதனால், இது ஒன்றும் புதுமை அல்ல.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; இதுவே தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வந்திருந்தா இப்பிடி சொல்வீங்களா? ''உடன்பிறப்பே! அம்மையாரின் ஐந்து மாத அடக்குமுறை ஆட்சியால் மக்கள் உள்ளம் வெந்து, இந்த உள்ளாட்சியில் கழகத்தை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். கழகம் மீண்டும் கோட்டையை கைப்பற்றும்.'' என்று சொல்லியிருப்பீங்கதானே!
 
ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேட்டிஒரு கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்சிக்கு, இனிமேல் தமிழகத்தில் எதிர்காலம் நிச்சயம் உண்டு என்பதை, தேர்தல் முடிவு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்ப தமிழகத்துல உங்க கட்சிக்கு எதிர்காலமே இல்லன்னு சொல்றீங்களா? ஏன்னா ஒருதடவை ஜெயலலிதா-ஒரு தடவை கருணாநிதின்னு கூட்டணி வச்சு உங்க கட்சிக்கு எந்த கொள்கையுமில்லன்னு பல தடவை நிருபிச்சிருக்கீங்களே!

அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள் !

அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள் 


அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக  அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.  நியுயார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள்.  வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கைஅசைக்கிறார்கள்.  தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள்.  நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது.  இரவில் தரை விரிப்பை போட்டு உறங்குகிறார்கள்.  

'வால் ஸ்ட்ரீட் மீட்கப்பட்டு விட்டது.  நாங்கள் விற்க்கப்பட்டுவிட்டோம்!'  என்னும் அட்டை வாசகத்தை இளைஞர்கள் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு சுற்றிவருகிறார்கள்.  'ஒரு சதவீத செல்வந்தர்கள், 99 சதவீத மக்களை ஆட்டிப் படிக்கிறார்கள்' என்கிறது ஒரு பதாகை.  '99 சதவீதத்தை காப்பாற்று' என்கிறது மற்றொன்று. 

தொடக்கத்தில் காவல்துறை இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை.  கண்டுக்கொண்டபோதும் இரு தவறுகள் செய்தார்கள்.  இரண்டு நாட்களில் காலி செய்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினார்கள்.  அது நடக்காத போது, அடித்து உதைத்து, கீழே தள்ளி, பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள்.  ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டபோது, 'ஐ ஹேட் பாலிடிக்ஸ்' ஆசாமிகள் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள். 

வால் ஸ்ட்ரீட் மீதான வெறுப்பும் கசப்புனர்வும்தான் முன்பின் அறிமுகம் இல்லாத, முன்பின் போராடாத ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைக்கிறது.  ஏன், குறிப்பாக வால் ஸ்ட்ரீட்? காரணம், இங்குள்ள நிதி, மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதரத்தையும் அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகின்றன. 

ஓர் உதாரணம், இந்த ஆண்டு, 'போர்ப்ஸ்' பத்திரிகையில் இடம்பெற்றுள்ள டாப் 400 அமெரிக்கச் செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1 .53  ட்ரில்லியன் டாலர்.  கடந்த ஆண்டை விட 12 சதவீத வளர்ச்சி. 
பில்கேட்ஸ், வாரன் பபெட் போன்றோர் வழக்கப்படி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  ஆனால், குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், வால் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த 96 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருந்தார்கள்.  இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட சீட்டாட்டம் போன்ற யூக வணிகத்தில் ஈடுபடுபவர்கள். 

அமெரிக்காவை உலுக்கிய பொருளாதார வீழ்சிக்குக் காரணமான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் யூக வணிக அமைப்புகளும் வால் ஸ்ட்ரீட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடிழந்து, வேலையிழந்து வீதிகளில் திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்குக் காரணமான நிறுவனங்கள் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்று ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.  இவற்றில் பல, திவாலானாவை.  மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு ஒபாமா அரசு இவர்களை மீட்டெடுத்தது. 

அதாவது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை, வால் ஸ்ட்ரீட் பாதிக்கப்படக்கூடாது.  இதுதானே அரசு கொள்கை? விரக்தியடைந்த அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வால் ஸ்ட்ரீட்டில் குவித்ததன் பின்னணி இதுவே.  ஒரு சிறு குழுவாகத் தொடங்கிய போராட்டம் இன்று வாஷிங்டன், பாஸ்டன், மிச்சிகன், சிக்காக்கோ, அலாஸ்கா, கலிபோர்னியா என்று அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. விக்க்லீக்ஸ அசாஞ்சே லண்டன் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.  சல்மான் ருஷ்டி, மைக்கேல் கன்னிங்ஹாம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற 100 எழுத்தாளர்கள் இணைய பெட்டிஷனில் கையெழுத்திட்டு ஆதர்வளித்திருக்கிரார்கள். 

அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன என்பதால், வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் அமெரிக்காவைக் கடந்து பிற நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது.  மெல்பர்னை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களைப் போலவே வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள்.  தொடங்கிய முதல் நாளே, மெல்பர்னிலுள்ள சிட்டி ஸ்கொயரில் ஆயிரம் பேர் திரண்டுவிட்டார்கள்.  'வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் சந்திக்கும் அதே பிரச்சினைதான் எங்களுக்கும். எங்களுடைய ஜனநாயகம் போலியானது.  பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்'.  சிட்னியில், மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிரில் 2 , 000 பேர் திரண்டுவிட்டார்கள்.  இவர்களில் பூர்வகுடிகள், தொழிற்சங்கவாதிகள், இதுசாரி சிந்தனை போக்கு கொண்டவர்கள் என்று பலரும் அடங்குவர். 

வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஒவ்வொரு நாட்டலிலும் ஒவ்வொரு வடிவம் எடுத்துள்ளது.  பங்குச்சந்தைப் பெருமுதலாளிகளை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள்.  டோக்கியோ, மணிலா, தாய்ப்பே, சியோல் என்று போராட்ட்டம் விரிவடைந்து கொண்டிருக்கிறது.  ஷாப்பிங் மால், தனியார் வங்கிகள், முக்கிய வர்த்தகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் முன்பு பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி நடைபோடுகிறார்கள்.  முழங்குகிறார்கள்.  நாடகம் நடத்துகிறார்கள்.  வித்தியாசமான ஒப்பனைகளுடன் கவனம் ஈர்க்கிறார்கள்.  இத்தாலியில் உள்ள யுனிகிரடிட் என்னும் மிகப் பெரிய வங்கியின் மீது முட்டைகள் வீசியதைத் தவிர, வேறு சட்ட விரோதச் செயல்கள் எதிலும் யாரும் இதுவரை ஈடுபடவில்லை.  ரோமிலும் வேறு சில நாடுகளிலும் கடைக் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.  

'அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!', 'பிலிப்பைன்ஸ் விற்பனைக்கல்ல!', 'ஜனநாயகம் தெருக்களில்தான் வாழ்கிறது' போன்ற முழக்கங்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.  'லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்!' என்னும் பெயரில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6 , 000  பேர் இணைந்துள்ளார்கள்.  இவர்கள் அனைவருக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டமே உத்வேகம் அளித்திருக்கிறது. 

தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்பதே வால் ஸ்ட்ரீட் போராட்டக்கார்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.  பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் மீடியாவிடம் இருந்தும் அரசியல் விமர்சகர்களிடம் இருந்தும் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிக்காட்டுதல்களையும் பெற்று இவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.  மக்கள் ஆதரவை நாடி, தீவிரப் பிரசார யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

அரபுலகப் போராட்டங்களுக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.  இணையம் மூலமே இவர்கள் ஒன்றிணைகிறார்கள்.  ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த மீடியாவை மெல்ல மெல்ல தம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள்.  இளைஞர்களே அதிகம் காணப்படுகிறார்கள்.  நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பங்கேற்கிறார்கள்.  தலைமை என்று எதுவுமில்லை.  ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு, வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் நோக்கம், தலைமை மாற்றம் அல்ல என்பதுதான்.  இவர்கள் எதிர்ப்பார்ப்பது சீர்திருத்தத்தை மட்டுமே.  ஆனால், அதையும் கூட அவ்வளவு சுலபத்தில் செய்து விட மாட்டோம் என்கிறது அமெரிக்கா. 

- நன்றி புதிய தலைமுறை 

துணை மேயர் பதவி; பத்துக்கு ஒன்றே ஒன்று!


துணை மேயர் பதவி; பத்துக்கு ஒன்றே ஒன்று!



உள்ளாட்சித் தேர்தல் மேயர் வேட்பாளர்களில் ஒரே ஒரு முஸ்லிமைக் கூட நிறுத்தாத முதல்வர் ஜெயலலிதா, பத்து துணைமேயர் பொறுப்பில் ஒரே ஒரு முஸ்லிமுக்கே வாய்ப்பு வழங்கியுள்ளார்.
 
 சென்னை துணை மேயர் வேட்பாளராக பெஞ்சமினும், மதுரைக்கு கோபால கிருஷ்ணனும், ஈரோடுக்கு கே.சி. பழனிச்சாமியும், சேலத்திற்கு நடேசனும், வேலூருக்கு தர்மலிங்கமும், கோவைக்கு சின்னதுரையும், திருப்பூருக்கு குணசேகரனும், திருநெல்வேலிக்கு கணேசன் (எ) ஜெகந்நாதனும், திருச்சிக்கு ஆசிக் மீராவும், தூத்துக்குடிக்கு சேவியரும் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!


துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்!




ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.

இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.


குர்பானி பிராணியின் வயது;

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )
இங்கு “
முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் 
முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
  1. கண் குறுடு
  2. கடுமையான நோயானவை
  3. மிகவும் மெலிந்தவை
  4. நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
கூட்டு குர்பானி;
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் நேரம் ;
ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி,

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை~ ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)~ ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)~ அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)


இறைச்சிகளை விநியோகித்தல்;

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.[22:28 ]

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்'என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5569

“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.


செய்யக்கூடாதவை;
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.ஆதாரம்:- புகாரி,


ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.


நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

அமைப்புகள் அரசியல்கள் இவற்றை எல்லாம் கடந்து இறையில்ல மீட்பு போரில் பங்கேற்க ஆயத்தமாகுவீர்!!-வேங்கை.சு.செ.இப்ராஹீம்


கொள்கை முழக்கம் எழுப்பிய "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"தின் ஓர் இலட்சிய பயணம்!


சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களின் இதயங்களை கீறி கிழித்தது அந்த மறக்கமுடியாத சம்பவம் இல்லை...இல்லை... திட்டமிட்டசதி... 
பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என்கிற துரோக வழியில் முஸ்லிம்களின் இறையில்லத்தை காவியுடை கயவர்கள் இடித்து தரைமட்டமாக்கியத்தை எட்டி நின்று வேடிக்கை பார்த்தது அன்றைய பிரதமர் "புன்னகை மன்னன்" நரசிம்மராவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு...  
அன்றைய டிசம்பர் 6 நாள்காட்டிகளில் வேண்டுமானால் மறைந்து மக்கி மண்ணோடு மண்ணாகி இருக்கலாம் ஆனால் முஸ்லிம்களின் மனங்களில் அந்த ஆறு மாறாத  வடு... 450 ஆண்டுகாலமாக முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாக கம்பீரமாக காட்சியளித்த பாபரி மஸ்ஜீத் பாவிகளின் கோடாலி முனைகளின் கோரப்பசிக்கு இரையானது. இறையாண்மை பற்றி மதசார்பின்மை பற்றி உலகிற்கே உபதேசம் செய்து வந்த இந்தியா இந்த இழிவான செயலால் உலக அரங்கில் தலைகுனிந்தது...
இறையில்லத்தை பறிகொடுத்துவிட்டு கைசேதமுற்ற மக்களாக  முஸ்லிம்கள் கலங்கி நின்றபோது வெந்த புன்ணிலேயே வேல் பாய்ச்சபடுவது  போல அப்பாவி முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் கோடிகணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டது...
இந்த அநியாய அக்கிரமங்களை எல்லாம் மதசார்பற்ற அரசு வேடிக்கைபார்த்தது....!!!

பாபர் மஸ்ஜீத் இடிக்கபட்டதற்க்கும் அதன் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாலபடுத்தபட்டவர்கள் அடுத்து வந்த காலங்களில் நாட்டின் மிக முக்கிய பதவிகளில் அமர்ந்து நாட்டை வலம் வந்ததுதான் அநாகரீகத்தின் உச்சம்... 
முஸ்லிம்களால் நடத்தப்பட்ட தொடர் நீதி போராட்டங்கள்... சட்டத்திற்கும் நாட்டின் ஜனநாயகத்திற்கும் மதிபளித்த பொதுக்கூட்டங்கள்... எதுவுமே முஸ்லிம்களுக்கு நீதியை தரவில்லை என்பது மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை...

பல்லாண்டுகால விசாரணைகள்... பல்லாயிரக்கணக்கான சாட்சிகள்... பலநூறு பக்க அறிக்கைகள்... அனைத்துமே குற்றமிலைத்தவர்களுக்கே கொடிபிடித்தது... முஸ்லிம்களின் இறுதிபட்ச நம்பிக்கை நீதிமன்றம்... அதன் தீர்ப்பும் கடந்த ஆண்டு வந்தது... உரியவனுக்கு ஒரு சிறு பங்கும் அத்துமீறியவனுக்கு இரண்டு பங்குமென அழகான அசிங்கத்தையே நீதிமன்றமும் நிறைவேற்றியது...

பொறுமையைகொண்டும் தொழுகையைகொண்டும் அல்லாஹுவின் பாதுகாப்பை நாடும் முஸ்லிம்கள் அமைதியாக  இந்த அக்கிரமத்தீர்ப்பையும்  கவனித்தார்கள்... இடிக்கப்பட்டது. அல்லாஹுவின் இல்லம்... அதனை மீட்க்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமை...
அந்த மீட்பு போராட்டத்தில் உயிரே போனாலும் கவலை இல்லை... சிறைபடுத்தபட்டாலும் ஏன் சிறை சேதமுற்றாலும் சிரித்தமுகத்துடன் ஷஹீதாவோம் உயர்நீதிமன்றத்தின் அநீதி தீர்ப்பு வெளியாகிய சில நாட்களிலேயே தமிழகத்தின் தலைநகரத்தில் கொள்கை முழக்கம் எழுப்பியது "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் அனுமதி மறுக்கப்பட்டபோதும் வீரியமாக சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டது "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்" இப்படியாக பாபர் மஸ்ஜீத் சம்மந்தமான அநீதி தீர்ப்பை எதிர்த்து முதலில் களமிறங்கிய பெருமை "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்" அமைப்பையே சாரும்... இந்தியாவின் மற்ற மாநில முஸ்லிம்களுக்கும் இதஜவின் போராட்டம் வீரியத்தையும் போராட தைரியத்தையும் கொடுத்தது என்பது மிகைபடுத்தப்பட்ட வார்த்தையல்ல...
போராட்டங்கள் நீர்த்துபோனால் எஞ்சியுள்ள முஸ்லிம்களின் உடைமைகளும் காணமல் போய் விடும். ஆகவே தொடர் போராட்டங்கள் முக்கியமாகியது... அதுவும் மற்ற சமூகமக்களும் நமது போராட்டத்தின் நியாயத்தை உணர வேண்டும் நாம் இழந்த நமது சொத்தைத்தான் மீட்க்க போராடுகிறோம் என்கிற உண்மை அவர்களுக்கும் விளங்கவேண்டியது அவசியம்... ஆம் அந்த பொறுப்பையும் இதே அநீதி தீர்ப்புக்கு எதிராக முதல் அஸ்திரத்தை ஏவிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தே ஏற்றுள்ளது"அல்ஹம்துலில்லாஹ்"

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ம் தேதிமுதல் டிசம்பர் 5 ம் தேதிவரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் "பாபரி மஸ்ஜீத் மீட்பு ரதயாத்திரை" நடத்துகிறது. இதன்மூலமாக முஸ்லிம்களின் நியாயங்கள் நடுநிலையான மற்றசமூக மக்களுக்கும் தெரியபடுவதொடு அக்கிரமக்காரர்களின் தீர்ப்பிற்கு எதிராக சகோதர சமுதாயங்களும் நம்முடன் கைகோர்க்கும் நல்ல வாய்ப்பை பெற முடியும்... இதஜவின் இப்பயணம் மிக அவசியமானது நமது உரிமைகளை நிலைநாட்டிட நமது வலிமையை அரசுக்கும் அசூரர்களுக்கும் தெரிவித்திட இப்பயணம் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக உதவிடும்...
 
"இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"
 என்கிற அமைப்பு நடத்துவதால் இப்பயணபோர் அந்த அமைப்பிற்கான
பேரணியோ ஊர்வலமோ அல்ல ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஜீவாதார மீட்புக்கான ஆரம்பம்...
தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் இந்த பயணத்தில்
பங்கேற்க வேண்டியது சமுதாய கடமை. அனைத்து ஊர் முஹல்லாஹ் ஜமாத்துகளும் முழுமையாக
ஆதரவு தரவேண்டிய நமது இறையில்ல மீட்பு போராட்டம் இது... ரதயாத்திரை பயணம் வலம் வரும் பகுதிகளில் வாழக்கூடிய முஸ்லிம்கள் முஹல்லாஹ் ஜமாத்துக்கள் பெருவாரியாக திரண்டு பங்கேற்க வேண்டும்...

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களே நல்லது யார் செய்தாலும் நாம் கைகொடுக்க வேண்டும்... எல்லாம் வல்ல அல்லாஹுவின் மாபெரும் துணையுடன் "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்"நடத்தவுள்ள இந்த "பாபரி மஸ்ஜீத் மீட்பு ரதயாத்திரை" சிறப்பான வெற்றியடைய அந்த வெற்றியின் மூலமாக நமது ஒற்றுமையும் அடங்க மறுக்கும் ஜனநாயக போர்க்குணமும் ஆளுவோருக்கும் ஆளத்துடிப்போருக்கும் அறியத்தருவோம்.
இடிக்கப்பட்ட இறையில்ல இடத்தை முழுமையாக மீட்டு இன்ஷாஅல்லாஹ் அதே இடத்தில் மீண்டும் கம்பீரமாக "பாபரி மஸ்ஜீத்"தை கட்டமைப்போம்.

இந்த வேளையில் இத்தகைய அதிமுக்கியமான போராட்டத்தை தனக்கே  உரிய தனிபாணியுடன் வீரியமாக முன்னெடுத்துள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தொண்டர்களுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் அனைதுவகையில் வலிமையை தந்திட திடகாத்திரமான உடல்நலத்தையும் மன வலிமையையும் அருளிட அனைவரும் மனதார துஆச் செய்வோம்...

பாபர் மஸ்ஜீத் மீட்பு நமது உரிமை... அதற்க்கான வெற்றி நமக்காக காத்திருக்கும் இடம் மறுமை! இந்தியா நமது தேசம்... இஸ்லாம் நமது சுவாசம்!!

அமைப்புகள் அரசியல்கள் இவற்றை எல்லாம் கடந்து இறையில்ல மீட்பு போரில் பங்கேற்க ஆயத்தமாகுவீர்!!
இந்திய திருநாட்டில் மற்றவர்களின் ரத்தங்களில் ரத்தயாத்திரை நடத்துவோருக்கு மத்தியில் நாம் நமது உரிமைக்கான ரதயாத்திரையை வலிமையாக நடத்திகாட்டுவோம்...!! இன்ஷாஅல்லாஹ்...!!

வேங்கை.சு.செ.இப்ராஹீம்

INTJ பெருநாள் தொழுகை

INTJ பெருநாள் தொழுகை 




Thursday, October 27, 2011

கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?


கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?




லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, தன் சொந்த மண்ணில் கடந்த 20ம் ,தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நாட்டின் ஆட்சியை, 1969ம் ஆண்டு ராணுவ கேப்டனாக இருந்த கடாபி, புரட்சி மூலம் கைப்பற்றினார். கடந்த 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை காட்டி, கடாபியை பதவியை விட்டு நீக்கிட முயற்சி செய்த ஒரு கூட்டம் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சமயம் பார்த்து காத்திருந்த உலக சட்டாம்பிள்ளையான அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கூடிய 'நேட்டோ' எனும் நாச நாட்டுப் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபியா ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுக்க சற்றே பின் வாங்கியது கடாபியின் ராணுவம். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதோடு, வான்வெளி தாக்குதலையும் லிபியாவில் மேற்கொண்டது நேட்டோ.
அதோடு, "கடாபி சரணடைய வேண்டும்' என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தின. ஆனால், இதை கடாபி மறுத்து விட்டார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட், கடாபியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்தது. ''சரணடைய மாட்டேன்; நேட்டோவுக்கு அஞ்சமாட்டேன்; வேறு நாட்டிற்கு ஓடவும் மாட்டேன்; வெற்றி அல்லது  வீரமரணம் என்பதே எனது இலக்கு என்று கர்ஜித்தார் கடாபி. 

இந்நிலையில் நேட்டோ ஆதரவுடன் கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கியதில், சமீபத்தில் தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததால்,  ஆட்சியை இழந்த நிலையில், கடாபி தலைமறைவானார். கடாபியின் சொந்த ஊரான சிர்தியில் கடாபி மறைந்திருக்கலாம் எனக் கருதிய   கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இங்கு நடந்த கடும் சண்டையில், கடாபியின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த அபுபக்கர் யூனுஸ் பலியானார். கடாபியின் மகன் ஒருவரும் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுடன் கடாபி பிடிபட்டார். அவரது இரண்டு கால்களும் பலத்த காயமடைந்திருந்ததாகவும் கிளர்ச்சிப் படையினர் தெரிவித்தனர். இந்த சண்டையில், கடாபியின் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர் மரணமடைந்தார் என்பதை விட காயங்களுடன் பிடிக்கப்பட்ட காடபியை கிளர்ச்சியாளர்கள் தாக்கியும், சுட்டும் கொன்றனர் என்ற தகவல் வலுவானதாக ஊடகங்களில் கூறப்படுகிறது.


கொல்லப்பட்டதாக கூறப்படும் கடாபியின் புகைப்படங்கள், வீடியோக்கள் மீடியாக்களில் வலம் வருகிறன. இவைகள் கடாபி கொல்லப்பட்டதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கடாபியின் மரணத்தை உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் அமெரிக்காவின் வெளியுறவுச செயலாளர் ஹிலாரி கிளிண்டன் லிபியாவுக்கு சென்று திரும்பிய மறுநாளே கடாபி கொல்லப்பட்டார் என்ற செய்தி சற்று சந்தேகத்தையும் எழுப்புகிறது.
எது எப்படியோ கடாபி கொல்லப்பட்டார். கடாபியின் மரணம் என்பது அவரது சர்வாதிகார ஆட்சியின் மூலம் பாதிக்கபட்ட மக்களின் எழுச்சியின் விளைவு என்று ஊடகங்கள் ஆரூடம் சொல்கின்றன. ஹிட்லர், முசோலினி, போன்றவர்கள் பட்டியலில் கடாபியையும் சேர்த்து அவரை சர்வாதிகாரியாக காட்டுவதில் வெற்றியும் பெற்றுவிட்டன. சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்கு இது ஹிட்லர் காலம் அல்ல என்பதை மட்டும் ஏனோ ஊடகங்கள் வசதியாக மறைத்து விட்டன. கடாபியின் 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டதாக கடந்த ஆண்டுவரை ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லையே? இந்த ஆறுமாத காலமாகத் தானே லிபியா ஊடகங்களில் அடிபடுகிறது. அப்படியானால் கடாபி திடீரென சர்வாதியாக மாறிவிட்டாரா? அவரது சர்வாதிகாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சிக்கு பின்னால் பிடிவராண்டு பிறப்பிக்கும் சர்வதேச நீதிமன்றம், முன்பே கடாபிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்காதது ஏன்? மேலும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கடாபியின் நாற்பது ஆண்டுகால சர்வாதிகார செயல்களை கண்டும் காணாமல் இருந்ததா? உலக ஊடகங்கள் பார்வைக்கு நாற்பது ஆண்டுகால சர்வாதிகாரம் தெரியாமல் மறைந்து விட்டதா? அப்படி ஊடகங்களுக்கு தெரியாமல் அடக்குமுறையை அமுக்கி விடமுடியுமா? அப்படியாயின் மக்கள் கிளர்ச்சி என்பது சர்வாதிகாரத்தின் பாதிப்பால் மட்டும் எழுந்ததல்ல. மாறாக வேறு ஏதோ ஒரு பின்னணி உள்ளது என்பது தெரிகிறதல்லவா?
அது என்ன? அரபுலகின் அஞ்சா நெஞ்சன் சதாம்  ஹுசைன் எப்படி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்தோடு எதிர்த்தாரோ, அதே போல அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி. அமெரிக்காவுக்கு அனுதினமும் ஒத்து ஊதுவதையே தொழிலாக கொண்டிருக்கும் ஐ.நா. பற்றி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கடாபி பேசுகையில், 
''ஐ.நா. சபையும் இந்த பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க கூடாது.பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.''என்றார்.
அதோடு, தனது வீட்டோ அதிகாரத்தை வைத்து அமெரிக்க அநியாயம் செய்து வருவதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்   கூடாது'' என்றார்.
மேலும் அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தில் கடாபி, ஆப்பிரிக்க யூனியன்,லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும் நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில் அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.
அதேபோல கொரியா , வியட்நாம் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முழங்கிய கடாபி, ''பின்லேடன் தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல , ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.'' என்று அமெரிக்காவுக்கு செக் வைத்தார்.
இதுபோல வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் அநியாயங்களை அகிலம் அறியும் வகையில் ஆணித்தரமாக பதிவு செய்தார் கடாபி. இது சதாமுடன் நாடு ரீதியான நமது எதிரிகள் சகாப்தம் ஒழிந்தது என்று கருதிய அமெரிக்காவுக்கு 'கிலி'யை உண்டாக்கியது. அதே நேரத்தில் ஈராக் போன்று நேரடியாக போர் தொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவும் அமெரிக்கா விரும்பவில்லை. எனவே பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக மக்களின் கிளர்ச்சி சிறு பொறியாக கிளம்ப,  அதை ஆயுதப் போராட்டமாக மாற்றி தானும் லிபியாமீது ஆயுத மழை பொழிந்து கடாபியை வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. எனவே கடாபியின் வீழ்ச்சி என்பது அமெரிக்காவின் சூழ்ச்சி என்பதே உண்மை.
அடுத்து இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். அமைதியாக போராடும் மக்கள் மீது கடாபி ஆயுதப்பிரயோகம் செய்து மக்களை கொன்றார். எனவே மக்களை காக்கவே நேட்டோ களமிறங்கியது என்ற அமெரிக்காவின் கூற்று உண்மையானால், லிபியாவில் கிளர்ச்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் தான் பஹ்ரைன், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் தொடங்கியது. இதில் பஹ்ரைனில் பெரிய அளவு போராட்டக்காரர்கள் பலியாகவில்லை. எனினும், சிரியா-ஏமன் ஆகிய நாடுகளில் இன்றுவரை கிளர்ச்சியாளர்கள் பலியாகி வருகின்றனர். உலக மக்களின் ஆபத் பாந்தவனான அமெரிக்கா, இந்த நாடுகளுக்கு  ஏன் தனது படையை அனுப்பவில்லை? ஒரே காரணம் தான். ஏமனோ-சிரியாவோ கடாபி போன்று அமெரிக்க எதிர்ப்பாளர்கள் அல்ல. எனேவேதான் அங்கே அந்த ஆட்சியாளர்களால் மக்கள் கொல்லப்பட்டாலும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. எனவே லிபியா மக்கள் மீதான கருணையால் அமெரிக்கா லிபியா மீது தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக தனது எதிரியை ஒழிக்கவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.
அடுத்து கடாபி கொல்லப்பட்டவுடன் ஒபாமா பேசிய செய்தியில், கடாபி அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எதிரானவராக இருந்தார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அடுத்து ஒபாமா சொல்லியுள்ளதுதான் மிக முக்கியமான 'பாய்ன்ட்'. அதாவது ''லிபியாவில் ஏற்பட இருக்கும் இடைக்கால அரசாங்கத்துடன் ஒரு பங்குதாரராக அமெரிக்கா இருக்கும்.'' என்கிறார். இது ஒன்றே கடாபி கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொல்லப் போதுமானதாகும். இராக்கிலும், ஆப்கானிலும் இருந்த தனது எதிரிகளை ஒழித்து, அங்கே தனக்கு தலையாட்டும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியது போன்று, லிபியாவின் கடாபியை ஒழித்து அங்கே ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது ஒபாமா வார்த்தை சொல்லும் உண்மையாகும். மேலும் ஒபாமா சொல்கிறார்; ''மேற்கு ஆசியாவில் உள்ள மற்ற சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை'' என்கிறார். ஒபாமாவின் இந்த பேச்சு,அமெரிக்கவை எதிர்க்கும் எவரும் ஆட்சியிலும்-அதிகாரத்திலும் ஏன் உயிரோடு கூட இருக்கமுடியாது என்பதை கடாபியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று மிரட்டும் வகையில் உள்ளது.
அமெரிக்காவின் தொடர் அநீதிகளை கண்டும் காணாமல் இருக்கும் நாடுகள், இனியேனும் கண்விழித்து கண்டிக்க முன் வரவேண்டும். குறிப்பாக அண்டை வீடுகள் பற்றி எறிந்தால்     நமக்கென்ன என்ற ரீதியில் இருக்கும் முஸ்லிம் நாடுகள் முன்வரவேண்டும். தவறினால் நேற்று..சதாம்., இன்று கடாபி., நாளை.?
இறுதியாக லிபிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கடாபி உண்மையில் சர்வாதிகாரியாக இருந்து லிபிய மக்கள்  பாதிக்கப் பட்டிருந்தாலும், அந்த பாதிப்பை போக்குவதற்கு லிபிய மக்கள் கொண்ட வழிமுறை நிரந்தர தீர்வளிப்பைவையாக இல்லை.  பெயரில் மட்டும் 'நல்லபாம்பு' என்று உள்ளதால், இதற்கு விஷம் இருக்காது என்று நம்பி நடு வீட்டில் வைத்தால் என்றாவது அது தீண்டாமல் விடாது. அதைப் போல கடாபியை தேளாக கருதிய லிபிய மக்கள், தேளை  ஒழிக்க அமெரிக்கா எனும் நல்ல[?]பாம்பின் உதவியை நாடி விட்டார்கள்.  அது காலைச் சுற்றிய பாம்பு என்பதை கண்முன்னே ஆப்கானிலும்- ஈராக்கிலும் கண்டபின்னும் லிபிய மக்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள். எது எப்படியோ, இனியாவது லிபியாவில் ரத்தம் சிந்தாமல் இருந்தால் சரிதான்.
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வார இதழ்.