Sunday, October 9, 2011

புதிய தமிழகத்தின் முடிவும்; மமகவின் மந்த நிலையும்.


புதிய தமிழகத்தின் முடிவும்; மமகவின் மந்த நிலையும்.

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து இரு தொகுதிகளில் மமக வென்றது. தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட சமுதாயத்தின் சில கோரிக்கைகளை சகோதரர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டமன்றத்தில் எழுப்பினார். அது  இந்த சமுதாயத்திற்கு மகிழ்ச்சியை தந்தது. 

அதே நேரத்தில் மமக தலைவரின் ஜெயலலிதா மீதான 
பாராட்டுமழை தினமலர் போன்ற ஏடுகளே ஏளனம் செய்யும் 
 வகையில் இருந்தது. இருந்தாலும் அரசியலில் இது சாதாரணம் என்று முஸ்லிம் சமுதாயம் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. 


அதாவது பரவாயில்லை.  மோடி உண்ணாவிரத நாடகம் ஆடியபோது அதற்கு ஆதரவளித்து  இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி தனது இந்துத்துவ பற்றை வெளிப்படுத்தினார். அப்போது ஜெயலலிதாவை கண்டித்து இந்த மமக கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்தால் அதன் மதிப்பு சமுதாயத்தில் உயர்ந்திருக்கும். மமக செய்யவில்லை.
 
 
அதே போல் மத கலவரத் தடுப்பு மசோதாவை ஜெயலலிதா எதிர்த்ததை கண்டித்து கூட்டணியை முறித்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. 
 
ஜெயலலிதா வெளியிட்ட மேயர் வேட்பாளர் மற்றும் மரியம்பிச்சை தொகுதி வேட்பாளர் அறவிப்பு ஆகியவற்றில் காட்டிய முஸ்லிம் விரோட   போக்கை கண்டித்து கூட்டணியை முறித்திருக்கலாம். ஆனால் மமக மூச்சுவிட வில்லை.
 
இப்போது கடைசியில் சீட்டு பேரம் படியாமல் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளது. எப்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு கடைசிவரை முயன்று வேறு வழியின்றி தனி களம் கண்டதோ, அதே பாணியில் இப்போது சீ சீ இந்த கூட்டணி பலம் புளிக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
 
கடந்த நாடாளுமனறத் தேர்தலில் மமகவை கடைசிவரை நம்பவைத்து கருணாநிதி கழுத்தறுத்து விட்டார் என்ற கோபம் சமுதாயத்தில் கருணாநிதி மீது இருந்தது. ஆனால் மமகவின் இப்போதைய கூட்டணி முறிவு மமகவிற்கு எதிரான கோபத்தை தான் முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. ஏனெனில், முஸ்லிம்களுக்கு எதிராக ஜெயலலலிதா காய் நகர்த்திய காட்சியை கண்டிக்க திராணியின்றி, கடிதம் எழுதி காலம் கடத்தியவர்கள் இன்று சீட்டு பேரம் படியாமல் தனிக்குடித்தனம் செய்ய வந்துள்ளார்கள் என்றும, இவர்கள் சமுதாய நலனை விட அரசியல் நலனை மட்டும் பார்க்கும் சராசரி கட்சிதான் என்ற மனநிலைக்கு முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். எனவே மானம் காக்கிறோம்; மாற்றம் காணுவோம் என்ற கோஷத்தை மமக எழுப்புவதில் பயனில்லை.
 
 மேலும், இந்த நேரத்தில் மமக போல கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் தனது சமுதாயத்திற்கு ஜெயலலிதாவால் ஒரு இழப்பு என்றவுடன் உறவை முறித்துள்ளது.

திருச்சி மேற்கு தொகுதி சட்டப்பேரவை தேர்தல் நிலை குறித்து புதிய தமிழகம் கட்சியின் உயர்மட்டக்குழு எனது தலைமையில் நடந்தது. கூட்டத்தில், இமானுவேல் சேகரன் நினைவு நாளில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை அத்துமீறி நடந்து கொண்ட இச்செயலுக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்காவிட்டாலும், குறைந்தபட்ச அனுதாபத்தையாவது அந்த மக்கள் எதிர்பார்த்தனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவில்லை. இந்த காரணங்களால் 13ம் தேதி நடைபெறும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதில்லைஎன்று முடிவு செய்துள்ளோம்.
அந்த தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பதை அங்குள்ள தொண்டர்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். தமிழக அரசுக்கு இனி பிரச்சினைகள் அடிப்படையில் மட்டுமே ஆதரவு அளிப்போம். அடுத்த தேர்தல்களில் கூட்டணி குறித்து அப்போதுள்ள சூழ்நிலைகளை பொறுத்து முடிவு செய்வோம் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
 
கிருஷ்ணசாமிக்கு உள்ள இன உணர்வு, சமுதாயப் பற்று மமகவிடம் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கூடுதலான ஒரு தகவல் என்னவென்றால், உள்ளாட்சியில் தனித்து நிற்கிறோம் என்றுதான் மமக அறிவித்துள்ளது. திருச்சி இடைத்தேர்தல் முடிவு என்ன என்பதை சொல்லவில்லை. அதோடு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி விட்டோம் என்றும் பகிரங்கமாக மமக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment