Thursday, November 24, 2011

நியாயம் வென்றது ! இஸ்ரத் என்கவுண்டர் வழக்கு தீர்ப்பு INTJ வரவேற்பு!


நியாயம் வென்றது ! இஸ்ரத் என்கவுண்டர் வழக்கு தீர்ப்பு INTJ வரவேற்பு!

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கௌன்டரில் கொல்லப் பட்டது போலியானது என்றும் என்கௌண்டர் நடந்ததாகக் கூறப் படும் 2004 ஜூன் 15 ம் தேதிக்கு முன்னரே இஷ்ரத் ஜஹான் கொல்லப் பட்டு விட்டதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவித் ஷேக், அம்சத் அலி ரானா, ஜீஷன் ஜோஹார் ஆகியோர் குஜராத் காவல்துறையால் 2004 ஜூன் 15 அன்று சுட்டுக் கொல்லப் பட்டனர். இவர்கள் நால்வரும் லஸ்கர் எ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்தவர்கள் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது.
கொல்லப் பட்ட இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கௌஷர், ஜாவித் அஹ்மத் தந்தை கோபிநாத் பிள்ளை ஆகியோர் தொடர்ந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் இவ்வழக்கை மேற்பார்வையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குஜராத் நீதிமன்றம் என்கௌண்டர் குறித்து விசாரித்து அறிக்கை தர சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் பல்வேறு சாட்சிகளை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு தமது விசாரணையை முடித்து கடந்த வெள்ளியன்று சீலிடப் பட்ட கவரில் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ''இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கௌன்டரில் கொல்லப் பட்டது போலியானது" என்றும் "என்கௌண்டர் நடந்ததாகக் கூறப் படும் 2004 ஜூன் 15 ம் தேதிக்கு முன்னரே இஷ்ரத் ஜஹான் கொல்லப் பட்டு விட்டார்" என்றும் கூறப் பட்டுள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போலி என்கௌன்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பிரிவின் கீழ் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் மாநில அரசிடம் ஆலோசித்து இந்த வழக்கை மத்திய அரசின் கீழ் செயல்படும் சி.பி.ஐ அல்லது தேசிய புலனாய்வு ஏஜென்சி போன்ற அமைப்பிடம் ஒப்படைப்பது குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் பின்னர் தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment