Friday, April 22, 2011

ஒரு மதத்தின் கோட்பாட்டை மற்றவர்கள் மீது திணிக்கும் அரசு!


வ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை கோட்பாடுகள், சடங்குகள்- சம்பிரதாயங்கள் இருக்கலாம் அது தவறென்று கூறமுடியாது. ஆனால் ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் செயல் ஆரோக்கியமானது அல்ல. அதிலும் குறிப்பாக வெகுஜன மக்களின் பிரதிநியான அரசே அத்தகைய செயலை முன்னின்று செய்வது புரியாத புதிராக உள்ளது. மகாவீர் அவர்கள் புலால் உண்ணாமை கொள்கையை கொண்டவராக இருந்திருக்கலாம். அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் மகாவீர் தினத்தன்று புலால் உண்ணாமல் இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை யாரும் தடுக்கமுடியாது. அதே நேரத்தில் மகாவீர் தினத்தன்று ஒட்டுமொத்தமாக இறைச்சிகள் வெட்டவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதிப்பது ஒருவரின் கோட்பாட்டை மற்றவர் மீது திணிப்பதற்கு ஒப்பாகும். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் 16 ம் தேதி மூடப்படும். இதே போல் ஆடு மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்களும் அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மதத்தையும் திருப்தி படுத்துவது அரசின் நோக்கமாக இருக்குமானால், ஒவ்வொரு மதத்தவரும் தமது குருவின் கொள்கையை ஒரு குறிப்பிட்ட நாளில் அமுல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்னாகும் என்பதை அரசு சிந்தித்து பார்க்கவேண்டும். எனவே அரசு இது விஷயத்தில் நல்லமுடிவை எட்டவேண்டும். தமிழகத்தில் ஒரு சதவிகிதம் அளவு வாழும் ஒரு சமுதாயத்திற்காக 99 சதவிகித மக்களையும் அம்மதத்தின் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்று சட்டம் போடுவது அரசின் அறியாமையாகும். இப்படி சட்டம் போடும் அரசு, ரமலான் மாதம் முழுவதும் பகலில் பட்டினி கிடக்கும் முஸ்லிம்களைப் போல் மற்றவர்களும் பட்டினி கிடக்கவேண்டும் என்று கூறுமா? எனவே இதுபோன்ற திணிப்புகளை அரசு கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் காந்தி ஜெயந்தியன்று மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்க்கத்தக்கதே! ஏனெனில் மது மனித குலத்தை நாசமாக்கும் மெல்லக்கொல்லும் விஷமாகும். எனவே காந்தி ஜெயந்தியன்று மட்டும் என்றில்லாமல் பூரண மதுவிலக்கை கொண்டுவர அரசு முயற்ச்சிப்பது தான் காந்திக்கு அரசு செலுத்தும் மரியாதையாகும்.

0 comments:

Post a Comment