Monday, February 7, 2011

தவ்ஹீது அரசியல்!?


மமக வேட்பாளர்களை மண்ணைக் கவ்வ வைப்பதே தலையாய பணியாக ததஜ அறிவித்துள்ளது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ததஜ கொள்கைக்கும் மமக கொள்கைக்குமுள்ள முரன்களைவிட முஸ்லிம் லீக்கின் கொள்கை ததஜவுக்கு ஒத்துப்போகாது என்றாலும் மமகவையே அழிப்பேன் என்று சபதமெடுத்திருப்பதன் பின்னணி ஒன்றும் ரகசியமல்ல.
 
முஸ்லிம் லீகிற்கு எதிராக ததஜ என்னதான்  மேடைகளில் முழங்கினாலும், முடிவு செய்யப்பட்டுள்ள ஓரிரு சீட்டில் மாற்றமிருக்காது என்பதை ததஜ அறிந்திருப்பதால் தற்போதைக்கு அதன் கவனம் மமகவிடம் திரும்பியுள்ளது. சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பவரை விழ வைப்பதைவிட, சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டிருப்பவரை விழ வைப்பது எளிது என்பதையும் ததஜ நன்கு அறிந்து வைத்துள்ளது. மேலும், மமகவுக்கு இடையூறு செய்தால் சமுதாய நலன்கருதி செய்யப்பட்டது என்றும்,மமக பதிலடி கொடுத்தால்தவ்ஹீதுக்கு எதிரானது என்றும் நம்பவைக்கவும் நம்பவும் சிலர் இருப்பது கூடுதல் பலம்.
 
ஒவ்வொரு தேர்தலில் யாரும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் "யாருக்கு ஆதரவு?" அல்லது ஏன் ___கட்சியை ஆதரிக்க வேண்டும்? என்ற விளக்கம் மூலம் நம்மவர்களுக்கு எதிராக நம்மவர்களே குழிபறிக்கும் அவலம் மற்ற எந்த அமைப்பிடமும் இல்லாத தனித்தன்மை! இதன்மூலம் நம்மவர்களுக்கு எதிராக காஃபீர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லாதுபோகிறது.
 
இவர்கள் சொன்னதாலேயே இடஒதுக்கீடு கிடைத்தது! இவர்கள் சொன்னால் இடஒதுக்கீடு முறையாக நடைமுறை படுத்தப்படுகிறதா? என கண்காணிக்க முதல்வர் கமிட்டி அமைப்பார். சமீபத்தில் இவர்கள் கூட்டிய 'பல லட்சம்' மக்கள் கூட்டத்தைப் பார்த்து உச்சநீதி மன்றம்  தாமாக முன்வந்து வழக்கை மறுவிசாரணை செய்தாலும் செய்யக்கூடும். ஆட்சியாளர்களும் அதிகார பீடமும் அச்சப்படும் (?!) இவர்களின் ஆள்பலம் சகமுஸ்லிம்களுக்கு எதிராக துர்ப்பிரயோகம் செய்யப்படுவது தவ்ஹீதுவாதிகளுக்கு சந்தோசமளிக்காது.
 
இவர்கள் பதவிக்காகவே கட்சி நடத்துகிறார்கள். இவர்களுக்கு உதவினால் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வர். ஏசி காரில் பவனிவரத் துடிக்கிறார் என்றெல்லாம் புலம்புவதன் பின்னணியில் போட்டியும் பொறாமையும், பழிவாங்கும் வெறியுமே மிகைத்திருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
 
இந்து முன்னணியை மண்ணைக் கவ்வ வைப்போம் என்று இந்து மக்கள் கட்சியோ, திராவிடர் கழகத்தை அரசியலிருந்து அப்புறப்படுத்துவோமென்று பெரியார் திராவிட கழகமோ தேர்தலுக்கு மட்டுமின்றி என்றுமே சொல்லாத போது, லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்னவர்கள் செய்வது அரசியலிலும் மார்க்கத்திலும் இல்லாத புதுமை! வாழ்க தவ்ஹீது அரசியல்!





அபு அஸிலா- தமிழ் முஸ்லிம் குழுமத்திலிருந்து...- 

0 comments:

Post a Comment