Thursday, February 10, 2011

சமஸ்கிருதத்தை காரணம் காட்டி முஸ்லிமுக்கு அனுமதி மறுப்பு; சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்! '


சமஸ்கிருதத்தை காரணம் காட்டி முஸ்லிமுக்கு அனுமதி மறுப்பு; சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!
'ள்பவன் கொடுத்தாலும், அடுத்துள்ளவன் கெடுப்பான்' என்பதைப் போல முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் ஏனோ பல்வேறு விஷயங்களில் அதிகாரவர்க்கம் மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடப்பதைக் காணலாம். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5  சதவிகித இடஒதுக்கீட்டின் பலன்  முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைக்காததற்கு, ஆட்சியாளர்களின் கண்கானிப்பின்மையும், அதிகாரிகளின் அலட்சியமுமே காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க முதல்வர் 'குழு' அமைத்தே இதை உறுதிப்படுத்த போதுமான  சான்றாகும். மேலும், அரசுப்பணிகளுக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிப்பது குறைவு. அதையும் 'நொண்டிச்சாக்கு' சொல்லி தள்ளிவிடும் அதிகார மனப்போக்கிற்கு நீதிமன்றம் அபதாரம் விதித்துள்ளது.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் நல்லமுகமது என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
தொல்லியல்துறையில் எபிகிராபிஸ்ட், கியூரேட்டர்(காப்பாளர்) உள்ளிட்ட 4பதவிகளில் சேர்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான், 4 பதவிக்கும் விண்ணப்பித்தேன். கியூரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தேர்வில் கலந்துகொள்ள முடியாதபடி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.நான் இந்து மதத்தை சேராதவர் என்பதால் எபிகிராபிஸ்ட் உள்ளிட்ட 3 பணிகளை வழங்க முடியாது என்றும், கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் காரணம் கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.11.09 அன்று பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவுக்கு பதில்மனுவை தாக்கல் செய்த தொல்லியல்துறை, தொல்லியல்துறையில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் அந்தப் பதவிக்கு அவரை ஏற்கவில்லை. கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு;
தொல்லியல்துறை, இந்து சமய துறையின் கீழ் வருவதல்ல. அங்கு சில பணிகளுக்குத்தான் இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. எனவே தொல்லியல் பணிகளை இந்துக்களுக்குத்தான் என்று மதத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.
மேலும், கியூரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவிக்காமல், பிறகு அந்த காரணத்தை கூறி விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை பிரதிவாதிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதன் பிறகாவது அதிகாரவர்க்கம் திருந்துமா..? 
-தரசைத்தென்றல் 

0 comments:

Post a Comment