Saturday, September 17, 2011

த .த .ஜ .வினர் தேர்தலில் போட்டியிடலாம். உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?


த .த .ஜ .வினர் தேர்தலில் போட்டியிடலாம்.

உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?


மார்க்கத்தில் நாளுக்கொரு பரிமானம் காணும் அறிஞர் பீஜேயும், அவரை தலைவராக கொண்டுள்ளவர்களும் அரசியல் விசயத்திலும் எடுத்த அவதாரங்கள் ஏராளம்; தாராளம். அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விட்டு அதை மறந்து வாரியத்தை வாங்கி வீரியம் இழந்து விட்டார்கள். நேரடியான அரசியலில் குதித்து விட்டார்கள் என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர் அணியினரை எகிறிக்குதித்து விமர்சித்த பீஜேயும் அவரை தலைவராக கொண்டவர்களும் இதோ அரசியல் எனும் சாக்கடையில்[அவர்கள் பாஷையில்] நீந்த இந்த உள்ளாட்சித் தேர்தலை வெள்ளோட்டம் பார்க்க தீர்மானித்துள்ளார்கள். ததஜவின் இந்த திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பார்ப்பதற்கு  முன்னால், அரசியல் குறித்த இவர்களின் கடந்த கால நிலைப்பாடுகளை கொஞ்சம் அசைபோடுவது இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.

கடந்த 1989 ஜனவரி  அல்ஜன்னத் இதழில் தேர்தல் குறித்து அறிஞர் பீஜே எழுதிய தலையங்கம்;

உங்கள் பொன்னான வாக்குகள்!
இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!

யாரைத் தேர்ந்தெடுத்தாலும்   லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)
வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.

நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989,

தேர்தலில் போட்டியிடும் யாரை தேர்ந்தெடுத்தாலும் அது தீமைக்கு துணை போனதாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் அறிஞர் பீஜே. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து தமுமுக தொடங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும்  அரசியல் இல்லை. ஆனால் யாரை ஆதரிப்பது என்பதை நாங்கள் தீர்மானிப்போம் என்று அறிவித்து அரசியலுக்கு புது அர்த்தம் கண்டார். ஜெயலலிதா கருணாநிதி என தான் ஆதரித்த அணிக்கு பிரச்சாரமும் மேற்கொண்டார்.

திடீரென தமுமுகவிலிருந்து விலகுவதற்கு அல்லது விலக்கப்படுவதற்கு முன்பாக, 'தேர்தல் களப்பணி ஆற்றினால் ஈமான் போய் விடும்' என்று ஏகத்துவத்தில் எதுகைமோனையோடு 2004  ல் எழுத்தோவியம் கண்டார்.

தமுமுகவிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட பின் தனக்கென ததஜவை உருவாக்கியபின், இது கொடி பிடிக்கும் கூட்டமல்ல; இது கொள்கை  கூட்டம் என்று கர்ஜித்தார். பின்னர் கொடி கண்டார்; கோஷமும் கொண்டார். அரசியலில் ஆதரவு நிலைப்பாடு கண்டார். அந்த கட்சிகளின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி, கருணாநிதிக்காக ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவுக்காக கருணாநிதியும் பழுக்க காய்ச்சி பழுத்த அரசியல்வாதியாக கரை சேர்ந்தார்.

இந்நிலையில், இவரின் பரமஎதிரியான தமுமுக அரசியல் களம் கண்டவுடன் 'மண்ணைக் கவ்வ வைப்பேன்' என்று மனுநீதி சிந்தனையில் முழங்கினார். முதல் தேர்தலில் முன்னுரை எழுதிய மமக, அடுத்த தேர்தலில்  இவரை மண்ணைக் கவ்வ வைத்து வெற்றியுரை எழுதியது. சட்டமன்றத்தில் தடம் பதித்தது. இது இவரை ரெம்பவே பாதித்து விட்டது  என்பதற்கு  சான்றுதான் இந்த நேரடி அரசியல் பிரவேச அறிவிப்பு.


"நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். உறுப்பினர்கள் கட்சி சாராமல் தனித்து போடியிடலாம். ஆனால் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் பிரச்சாரம் செய்யாது.

எனவே தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரையோ, கொடிகளையே எந்த வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாவட்ட, கிளை நிர்வாகிகள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரச்சாரம், மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாநில தலைமை கேட்டுகொள்கின்றது."
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிக்கையில், ''ததஜ என்பது நேரடியாகவோ-மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடாது. நாங்கள் சீட்டுக்காக-நோட்டுக்காக சமுதாயத்தை அடகு வைக்கமாட்டோம்; எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று உங்களிடம் வரமாட்டோம் என்று இதுவரை சொன்னதற்கு  மாற்றமாக, தனது அமைப்பின் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பீஜே தலைமையிலான ஜமாஅத் சொல்கிறது. நாங்கள் பைலா வைத்திருக்கிறோம். அந்த பைலாப் படிதான் எல்லாம் செய்வோம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கும் பீஜேயும், அவரை தலைவராக கொண்டவர்களும் 'உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஒரு வரியை ததஜ பைலாவிலிருந்து காட்டுவார்களா?

இப்படி நாம் கேட்டவுடன் உறுப்பினர்கள் போட்டியிட பைலாவில் தடையிருக்கிறதா என்று வார்த்தை விளையாட்டு விளையாடுவார்கள். பைலாவில் அமைப்பின் செயல் திட்டங்கள் என்ற பகுதியில், 'உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. என்று உள்ளதே! பைலாவின் இந்த சட்டம் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாதா? உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்று காட்டமுடியுமா?

அடுத்து, இதே உள்ளாட்சித் தேர்தல் குறித்து பைலாவில் செயல்திட்டத்தில்  கூறும்போது, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும்  ஆதரவாக கருத்துக் கூறுவதோ, அல்லது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. மேலும் அனைத்து மட்ட நிர்வாகிகளும், அனைத்து மட்ட செயற்குழு-ப்துக்குழு உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தலில்  பிரசாரம் செய்யக் கூடாது'  என்று விதி இருக்கிறது. ஆனால் இதே
உள்ளாட்சி தேர்தலில்  உறுப்பினர்கள் மட்டும் போட்டியிடலாம் என்ற விதி இல்லையே?

மேலும், ''உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்'' என்று உள்ளதே! எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்பது அமைப்பின் கொள்கையல்லவா? அதற்கு மாற்றமாக தேர்தலில் போட்டியிடுபவர் எப்படி இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியும்?
மேலும் சில தவறுகளை செய்தவர்கள் மாநில-மாவட்ட-கிளை நிர்வாகத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறும் பைலா விதி, அந்த தவறுகள் பட்டியலில் 'உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுவதையும்' குறிப்பிடுகிறதே?

அப்படியானால் பைலா எதை  தவறென்று சொல்கிறதோ எந்த தவறை செய்தால் சாதாரண கிளை நிர்வாகி பதவியை கூட பெற தகுதி இல்லை என்று சொல்கிறதோ, அந்த தவறை அதாவது தேர்தலில் போட்டியிடக்கூடிய அந்த தவறை  மாநில நிர்வாகமே செய்யத் தூண்டுவது அமைப்பு விதியை மாநில நிர்வாகமே மீறுவது ஆகுமே?

 ததஜவின் இந்த புதிய அறிவிப்பு பிரகாராம் இன்றைக்கு உறுப்பினர் போட்டியிட அனுமதி; உள்ளாட்சியில் போட்டியிட அனுமதி. நாளை நிர்வாகிகள் போட்டியிட அனுமதி; சட்டமன்றம்-நாடாளுமன்றத்திற்கு போட்டியிட அனுமதி. [மறைவான ஞானமா? என்று கேட்க வேண்டாம். ததஜவின் வெளிப்படையான நடவடிக்கையை  வைத்து செய்யும் கணிப்பு இது]

இதையெல்லாம் விட, பீஜே தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உள்ளாட்சியில் போட்டியிட்டு மேயரானாலும் தடுக்க முடியாதே? ஒரு வேளை அதற்கான முன்னோட்டம்தான் இந்த வெள்ளோட்டமோ? அல்லாஹ்வே அறிந்தவன்.

உங்கள் ஒட்டு ததஜ'வுக்கே!
-ஆக்கம்; முகவைஅப்பாஸ். 

0 comments:

Post a Comment