Friday, September 23, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்!


அமெரிக்க அதிபர் ஒபாமா அறிக்கை: அமெரிக்கா எப்போதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக போரிட்டதில்லை.இவர்களுக்கு எதிராக போரிட போவதும் இல்லை. நாங்கள் அல்குவைதாவுக்கு எதிராகத்தான் போராடி வருகிறோம்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அடடா! போற போக்கப் பாத்தா ஈராக், ஆப்கானிஸ்தானில் உங்க படையால் கொல்லப்பட்ட குழந்தைக முதல்கொண்டு எல்லோரும் அல்காயிதா தான்னு சொல்வீங்க போலிருக்கே?
 
தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டிதமிழகம் ஒரு விசித்திரமான மாநிலம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நீண்ட காலமாக தீர்க்க முடியாத பிரச்னைகள் இங்கு அதிகம். உதாரணமாக, முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்டவை. போதாக்குறைக்கு மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சர்வதேச எல்லைப் பிரச்னையும் தமிழகத்தில் உள்ளது. அவற்றைத் தெரிந்து, உணர்ந்து சமாளிக்க, உலக அரசியல் ஞானம் உள்ள தலைவர் தேவை. முதல்வர் ஜெயலலிதாவிற்கு அத்தகைய தகுதியும், திறமையும் உள்ளது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; முதல்வரோட இந்த திறமை உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கட்சி மாறியிருக்க மாட்டீங்களோ?
 
தமிழக, "கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டிகடந்த தி.மு.க., ஆட்சியின் போது, உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு விட்டன. அந்த அதிகாரங்களை திரும்ப வழங்கி, உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும். உள்ளாட்சி பதவி பொறுப்பாளர்கள், நேரடியாக தேர்வு செய்யப்படுவர் என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அப்பாடா! மொத தடவையா கள்ள விட்டுட்டு வேற பேச்சு பேசியிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமுங்க.
 
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்;  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய, மூன்று நீதிபதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த, "சிமி' பயங்கரவாதிகளின் முயற்சியும், கடந்த ஜூனில் முறியடிக்கப்பட்டது.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அடேங்கப்பா! வெடிக்காத குண்டுவெடிப்பை மோப்பம் படிச்சு வெற்றிகரமா முறியடிச்ச மாதிரி, அப்பப்ப நெசமாகவே வெடிக்கிறதையும் கொஞ்சம் முறியடிச்சா நல்லது.
 
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்; தூக்கத்தில் கனவு வராது. கனவு காண்பவர்களால் தூங்க முடியாது. எனவே, இளைஞர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.
 
பஞ்ச் பட்டிக்காட்டான்; அய்யா! என்ன ஆச்சு உங்களுக்கு? தூக்கத்துல தான கனவு வரும். கனவு காணுறவங்க தூங்க முடியாதுன்னு வேற சொல்றீங்க. கனவும் காண சொல்றீங்க. இப்பவே கண்ணக் கட்டுதே!

0 comments:

Post a Comment