Wednesday, January 5, 2011

ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையும்; இந்தியாவின் அடவாடித்தனமும்!



இங்கிலாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் உள்ள விமான நிலையத்தில் 2007ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியர் சபீல் அகமது கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சபீல் அகமதுவின் உறவினர் ஹனீப். இவர் ஒரு டாக்டர். இவர் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள கோல்டு கோஸ்ட் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். அவரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்து நாட்டுக்கு ஹனீப் சென்றபோது, அவர் தன் மொபைல் போன் மற்றும் சிம்கார்டுகளை சபீல் அகமதுவின் வீட்டில் தவறுதலாக விட்டு விட்டு வந்தார். இதை தொடர்புபடுத்தி அவர் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் 12 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். இது இந்திய மக்களை கோபப்படுத்தியது. இதன் பிறகு கிளார்க் கமிஷன் விசாரணை நடத்தி ஹனீப் குற்றமற்றவர் என்று அறிவித்தது. இந்த நிலையில் ஹனீப் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
மானநஷ்ட வழக்கை கைவிடுவதற்காக அவருடன் ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் அவர் வழக்கை கைவிடுவது என்றும், அதற்கு பதிலாக அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்பது என்றும், அதோடு இழப்பீடாக ஒரு தொகை வழங்குவது என்றும் முடிவானது.அதன்படி ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது என்று பத்திரிக்கை செய்திகள்  கூறுகின்றன.
 
இந்த செய்தியின் மூலம் இந்தியாவின் அதிகார வர்க்கத்திற்கு ஒரு படிப்பினை உள்ளது. அது என்னவெனில், இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும், அதற்காக முதலில் சந்தேகப்பார்வை பார்க்கப்படுபவர்களும், கைது செய்யப்படுபவர்களும் முஸ்லிம்களே என்ற எழுதப்படாத சட்டம் இந்தியாவில் நிலவுகிறது. மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் கூட உண்மையான இந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னால், அந்த பழியும் முஸ்லிம்கள் மீதே  பதிந்தது.
 
ஒரு தீவிரவாத  சம்பவம் நடந்த உடனேயே அதுபற்றி விசாரணை தொடங்கும் முன்பே, அந்த தீவிரவாத செயலை பொறுப்பேற்று  கொண்டதாக ஒரு முஸ்லிம் அமைப்பு [அப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பது தனி விஷயம்] பெயரை பத்திரிக்கைகளில் பரவவிடுவது; பின்பு அதே கோணத்தில் விசாரணையை கொண்டு சென்று சில முஸ்லிம்களை கைது செய்வது; பின்னர் சில மாதங்களில், அல்லது சில ஆண்டுகள் கழித்து அந்த முஸ்லிமுக்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று விடுவிப்பது.
 
ஒரு தீவிரவாத சம்பவத்தில் ஒரு முஸ்லிம் கைது செய்யப்படும்போது அதுபற்றி முகப்பு செய்தியில் போட்டு தமது முகத்தை காட்டும் பத்திரிக்கைகள், அதே முஸ்லிம் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படும் செய்தியை பத்திரிக்கையின் ஒரு மூலையில் கூட போடத் தயாரில்லை. அவன்  செய்யாத தவறுக்கு அடைந்த தண்டனையும், ஏற்பட்ட அவமானத்திற்கும் யார் நஷ்டஈடு தருவது? உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்ட மதானி தொலைத்த ஒன்பது ஆண்டுகால இளமையை, அவர் இழந்த வருமானத்தை, அவரும் அவரது குடும்பமும் பட்ட அவமானத்தை யார் சரிசெய்யமுடியும்?
 
ஆனால், இதற்கும் ஆஸ்திரேலியா முன்மாதிரியாக உள்ளது. டாக்டர் ஹனீபிடம் மன்னிப்பு கேட்டதோடு, உரிய இழப்பீடும் வழங்கியுள்ளது. இதேபோன்று இந்தியாவும் ஒரு வழக்கில் கைது செய்யப்படும் ஒருவன், அது சாதாரண பிட்பாக்கெட் வழக்காக இருந்தாலும், பெரிய பயங்கரவாத வழங்காக இருந்தாலும் அவன் குற்றமற்றவன் என்று விடுதலை  செய்யப்பட்டால் அவனிடம் சம்மந்தப்பட்ட துறையினர் மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் அவனுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்டஈடு சம்மந்தப்பட்ட துறையினரிடமே வசூலித்து வழங்கவேண்டும். மேலும் அவனைப்பற்றி எந்த பத்திரிக்கையில் குற்றவாளியாக காட்டப்பட்டானோ, அதே பத்திரிக்கையில் அவன் குற்றமற்றவன் என்ற செய்தி இடம்பெறச் செய்யவேண்டும். அப்போதுதான் எடுத்தேன்-கவிழ்த்தேன் பாணி கைதுகளும், மததுவேஷ கைதுகளும், முன்விரோத கைதுகளும் குறையும். செய்யுமா இந்தியா?

-முகவை அப்பாஸ் .

0 comments:

Post a Comment