Thursday, December 2, 2010

தடுமாறும் தக்லீத் ஜமாஅத் !

பெருநாள் விசயத்தில் தாங்களாக ஒரு நிலைபாடு எடுத்து அதை நிறைவேற்றிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினரின் செயல் பாடுகள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக தடுமாறிய வண்ணம் உள்ளது. துபையில் ஒரு நிலையையும் பின் தமிழ்நாட்டில் ஒரு நிலையையும் எடுத்து முதலில் தடுமாறினர். ஆனால் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்தபின் பலவிதமான பதில்களை கூறி இன்றளவும் சமாளித்து வருகின்றனர். தவறு செய்தால் அதை திருத்திக்கொள்வதுதான் மனித இயல்பாகவும் மூமினுக்கு அழகாகவும் இருக்கமுடியும். ஆனால் தங்களின் வறட்டு பிடிவாதத்தினால் இவர்களின் மற்றொரு குழப்பத்தினைப் பாரீர்!.

காஞ்சிபுர மாவட்டத்தில் குர்பானியை இவர்கள் பெருநாள் கொண்டாடிய 18-11-2010 அன்றைக்கு முதல்நாளான 16 & 17-11-2010 அன்றே சுமார் ஏழு மாட்டினை அறுத்து குர்பானி கொடுத்துள்ளனர். இவர்கள் பெருநாளைக்கு முன்பே குர்பானி கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?. அப்படி கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு அறுத்த சராசரி உணவாகத்தானே இது இருக்க முடியும் என்று நாம் குழம்பிய நிலையில், கூட்டுக்குர்பானி என்ற பெயரில் இவர்கள் வசூல் செய்து குர்பானி கொடுக்க இருந்தனர். இவர்கள் தனியாக பெருநாள் கொண்டாட அறிவிப்பு செய்ததை அறிந்த குர்பானியில் பங்குத்தொகை செலுத்திய சிலர், நாங்கள் பெருநாள் கொண்டாடிய தினத்தில் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கறாராக கூறிவிட்டதால் வேறு வழி இல்லாமல், இந்த ஏழு மாட்டினையும் அறுத்து குர்பானி கொடுத்துள்ளனர். இது இந்திய (சென்ட்ரல்) தவ்ஹீது ஜமாத்தின் இணையதளத்தில் செய்தியாக வெளிவந்தது. இது இவர்களுக்குள் இருக்கும் காழ்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளனர் என்று நாம் நம்ப மறுத்தோம்!. பின் தமிழ்நாடு (ஸ்டேட்) தவ்ஹீது ஜமாத்தின் இணையத்தில் இதற்கான விளக்கம் வந்ததும்தான் நமக்கு சில நியாயமான ஐயங்கள் எழுந்துள்ளது. அது:

மொத்தம் 185 மாடுகள் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாங்கப்பட்டு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. கொண்டுவரும் போது மாட்டின் மீது மாடுகளே ஏறி மிதித்ததில் 16.11.10 அன்று ஒரு மாடு மிகுந்த கவலைக்கிடமான நிலையை அடைந்தது. நிலைமையை அறிந்த மாவட்ட நிர்வாகிகள் அந்த மாட்டை 16.11.10 அன்றே அறுத்தனர். அந்தக் கறி ஏழைகளுக்கு அன்றே விநியோகிக்கப்பட்டது. என்று கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் கொண்டு வரப்பட்ட மாடுகளில் 17.11.10 அன்று 6 மாடுகள் கவலைக்கிடமான நிலையை அடைந்தன. அந்த 6 மாடுகளையும் 17.11.10 அன்றே அறுத்து விட்டனர். இது போன்று நூற்றுக்கணக்கான மாடுகளைக் கட்டி லாரிகளில் கொண்டு வரும் போது சில மாடுகள் இவ்வாறு கவலைக்கிடமான நிலையை அடைவது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றும் கூறியுள்ளனர்.

சாகும் நிலைக்கு மாடு செல்லும் அளவிற்கு நூற்றுக்கனக்கான மாடுகளை எப்படி லாரிகளில் ஏற்றினீர்கள்?. அதற்கு லாரியில் இடம் இருந்ததா?. முதல் நாள் தான் ஒருமாட்டிற்கு இந்த நிலை ஏற்பட்டதென்றால் அது எப்படி தொடர்ந்து அடுத்த நாளும் அதே நிலை ஆறு மாட்டிற்கும் ஏற்பட்டது?. கூட்டுக்குர்பானி திட்டத்தை பல வருடமாக நடத்தி வருவதால் உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்குமே!. இதற்கு முந்தைய வருடங்களில் மாடுகளுக்கு இதுபோல் ஏற்பட்டதுண்டா?. மக்கள் ஏதோ இலவச வேட்டி சேலை வாங்க முற்பட்டு கூட்டத்தில் சிக்கி மூச்சு தினரியதைப்போல் இந்தமாடுகளும் சேலை ஏதும் வாங்க முற்பட்டதா?. மாறாக கூட்டுக்குர்பானிக்காக முதல்நாள் பெருநாள் கொண்டாடிய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஏழு மாட்டினையும் இவர்கள் அறுத்ததாக அல்லவா நமக்கு தெரிகின்றது!. அதற்கான காரணமாக இவர்கள் கூறுவதைதான் நம்மால் ஏற்கமுடியவில்லை! அது:

இந்த 6 மாடுகளில் இருந்து அறுக்கப்பட்ட கறியை நங்கநல்லூர் பகுதியில் சுன்னத் ஜமா-அத்தை சேர்ந்த குர்பானியில் பங்கு சேர்ந்த நபர்கள் குர்பானி பங்குக்குரிய கறியை 17.11.10 அன்றே கேட்டதால் அந்த பகுதியில் கறி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கறியை விநியோகம் செய்த மாவட்ட நிர்வாகிகள் முந்தைய நாளே அறுக்கப்பட்ட கறியை குர்பானியில் பங்கு சேர்ந்த பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது இது குர்பானி ஆகுமா? என்று ஆலோசனை செய்த போது, அது குர்பானி ஆகாது. அதை தர்மமாகத் தான் கணக்கிட வேண்டும் என்று சக மாவட்ட நிர்வாகிகளே பேசி கூடி முடிவெடுத்ததன் அடிப்படையில், 18.11.10 அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு 42மாடுகள் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக குர்பானி கொடுக்கப்பட்டன. 18.11.10 அன்று பெருநாள் தொழுகைக்கு முன்பாக அறுக்கப்பட்ட ஏழு மாடுகளும் குர்பானி அல்லாமல் ஏழைகளுக்காக வழங்கப்பட்டவை என்றும் அந்த 7மாடுகளுக்குரிய பணம் நமது ஜமாஅத்திற்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அந்த நஷ்டத்திற்கு தானே பொறுப்பேற்று எனது சொந்தப் பணத்தை வழங்கிவிட்டதாக மாவட்ட செயலாளர் அப்துல்காதர் அவர்கள் தெரிவித்தார். என்றும் கூறியுள்ளனர்.

பங்குதாரருக்கு பங்கைப்பிரித்து கொடுத்ததைக்கூட இலவசமாக கொடுத்தோம் என்று கூறுவதுதானா உங்களின் கூட்டுக்குர்பானி திட்டம்?

பிராணிகள் இத்தகையை நிலையை அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்குத் தெளிவான வழிகாட்டுதலைத் தந்துள்ளது.
حدثنا إسحاق بن إبراهيم سمع المعتمر أنبأنا عبيد الله عن نافع أنه سمع ابن كعب بن مالك يحدث عن أبيه أنه كانت لهم غنم ترعى بسلع فأبصرت جارية لنا بشاة من غنمنا موتا فكسرت حجرا فذبحتها به فقال لهم لا تأكلوا حتى أسأل النبي صلى الله عليه وسلم أو أرسل إلى النبي صلى الله عليه وسلم من يسأله وأنه سأل النبي صلى الله عليه وسلم عن ذاك أو أرسل فأمره بأكلها قال عبيد الله فيعجبني أنها أمة وأنها ذبحت تابعه عبدة عن عبيد الله
2304 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: சல்உ எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தறுவாயில் இருப்பதை எங்கள் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள். என்று ஒரு ஹதீஸை ஆதாரமாக கூறியுள்ளனர்.

நாம் கேட்பது என்னவென்றால், அடிமைப்பெண் அறுத்த ஆடு என்பது இதுபோன்று குர்பானி கொடுப்பதற்காக வாங்கப்பட்ட ஆடுகளா? அல்லது அவர்களின் பண்ணைகளில் உள்ள சாதாரண ஆடுகளா?. ஏனெனில் சாதாரண ஆடுகள் என்றால் அவ்வாறு அறுத்தது சரி என்று கூறிவிட்டு சென்றுவிடலாம். ஆனால் குர்பானி கொடுப்பதற்கு அறுக்கப்படும் விளங்கினத்திற்கு என்று சில வரையரைகளை நபி அவர்கள் கூறியுள்ளனர். நீங்கள் கூறுவதைப்போல் மிதிபட்டதினாலே ஏழு மாடுகள் இறக்கும் தருவாய்க்கு சென்றதென்றால், வாங்கப்பட்ட மாட்டின் நிலையை நீங்கள் நன்றாக அறியமுடியும்!. மேலும் குர்பானிக்கென தொகையை சுன்னதுவல் ஜமாத்தை சேர்ந்தவர்களிடம் பெற்றுக்கொண்டுவிட்டு, அவர்களுக்கு சாதாரண இறைச்சியை வழங்கினோம் என்று நீங்கள் கூறி இருப்பது மாருசெய்ததல்லவா?. முறைப்படி நீங்கள் பெருநாள் கொண்டாடிவிட்டு அடுத்த நாள் அறுத்தீர்களே! அதில் இருந்தல்லவா இந்த சுன்னதுவல் ஜமாஅத்தை சேர்ந்த மக்களுக்கும் நீங்கள் கொடுத்திருக்கவேண்டும்!. ஆனால் உங்களின் பெருநாள் தினத்தை அவர்கள் ஏற்க மறுத்து தங்களின் பணத்தினை அல்லது குர்பானி இறைசியினை கேட்டதினால் இந்த நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்கள்.

மேலும் உங்களின் அறிக்கையிலே ஒரு இடத்தில் “சுன்னத் ஜமா-அத்தை சேர்ந்த குர்பானியில் பங்கு சேர்ந்த நபர்கள் குர்பானி பங்குக்குரிய கறியை 17.11.10 அன்றே கேட்டதால் அந்த பகுதியில் கறி விநியோகம் செய்யப்பட்டது” என்றும் பின் 18.11.10 அன்று பெருநாள் தொழுகைக்கு முன்பாக அறுக்கப்பட்ட ஏழு மாடுகளும் குர்பானி அல்லாமல் ஏழைகளுக்காக வழங்கப்பட்டவை” என்றும் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளீர்களே!. இதுதான் இரட்டை நிலையாகும். ஆக பெருநாள் தொடர்பாக ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டு பின் தவறுக்கு மேல் தவறு செய்ததாகவே நமக்கு இது படுகின்றது. மறைமுகமாக 16,17.11.10 அன்று பெருநாளை த.த.ஜ வினர் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இதற்கும் துபாய் பெருநாள் போல் நிர்பந்தம் என்று கூறப்போகிண்றீர்களா?. அல்லது நாம் முன்பு கூறியதைப்போல் மூண் (று) பெருநாட்களையும் நீங்கள் கொண்டாடிவிட்டீர்களா?. அல்லது அடுத்த கூட்டுக் குர்பானி திட்டத்தில் இந்த சுன்னதுவல் ஜமாத்தினரை கழட்டிவிடப் போகிண்றீர்களா?.

தவ்ஹீது ஜமாத்தின் என் இனிய சகோதரர்களே!. இதற்கும் தலைமை விளக்கம் தந்துவிட்டது என்று அப்படியே ஏற்றுக்கொள்ளப் போகின்றீர்களா?. அல்லது இது தவறே என்று உங்களின் உண்மை நிலையை தலைமைக்கு வினாவாக தொடுக்கப் போகிண்றீர்களா?. அல்லாஹ் தான் நன்கு அறிந்தவன்!.

1 கருத்து சொல்ல வாங்க!:

சம்சுதீன் சொன்னது…

மாட்டை நிர்வகிக்க முடியாதவர்கள் எப்படி மாவட்ட நிர்வாகியாக இருக்கமுடியும்?. இவர்களின் இரட்டை வேடம் அல்லாஹ்வின் உதவியால் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருகின்றது. எனவே இனி நான் த.த.ஜாவை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இனி அவர்களின் போராட்டத்திற்கும் அவர்கள் மட்டும் நடத்தட்டும்.


0 comments:

Post a Comment