Wednesday, December 1, 2010

இஸ்லாத்தின் எல்லைக்கோடு !

நீங்கள் “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நேரத்தில் இறைவன் கொடுத்த சட்ட திட்டங்கள் தாம் உங்களுக்குச் சட்ட திட்டம்; இறைவன் தான் உங்களுக்கு ஆணையாளன். இறைவனுக்குத் தான் உங்கள் வழிபாடு; திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையையும் கடைபிடிப்பது தான் நேர்மையானது என்னும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு வாக்குறுதி அளித்தவர்களாக இருக்கின்றீர்கள்.

இதன் கருத்து நீங்கள் இஸ்லாத்தை தழுவியவுடன் உங்கள் சுதந்திரம் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள்! எனவே ஒரு பிரச்னை குறித்து “இது என் கருத்து” என்றோ “உலக நடைமுறை அப்படி இருக்கிறது” என்றோ “இது குடும்ப நடைமுறை” என்றோ “இன்ன பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்” என்றோ சொல்லும் உரிமையே உங்களுக்கு இப்போது கிடையாது.

திருக்குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் எதிராக எதையும் உங்களால் செய்ய முடியாது. இப்போது உங்கள் வேலை திருக்குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் எதிரில் உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் அலசிப் பார்ப்பதுதான்! அவற்றின் ஒப்புதலைப் பெறும் விஷயங்களை எடுத்துக் கொளுங்கள்; அவற்றிற்கு முரண்பட்ட விஷயத்தைத் தூக்கி எறியுங்கள்! அது யாருடைய பேச்சாக இருந்தாலும் சரி, எவருடைய பாதையாக இருந்தாலும் சரியே!

தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதும், அப்படி சொல்லிக்கொண்டு திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மேலாகத் தன் கருத்தையோ, உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ, செயலையோ மேலானது எனக் கருதி அவற்றைக் கடைபிடித்தால் அவை ஒன்றுகொன்று முரண்பட்ட செயலாகும்.

கண்களை இழந்தவன் தன்னைப் பார்வையுள்ளவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. இதைப் போலவே தன் வாழ்கையில் குறிக்கிடுகின்ற பிரச்னைகள் அனைத்திற்கும் திருக்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்ற மறந்துவிட்டு அவற்றிற்கு மாறாக சொந்த சிந்தனையையோ உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ, செயலையோ மேலானது எனக் கருதி அவற்றைக் மேலோங்கச் செய்கிறவன் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

ஒருவன் முஸ்லிமாக இருக்க விரும்பவில்லை என்றால் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை, எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கின்றது. ஆனால் அவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் இஸ்லாத்தின் எல்லைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவன் தன்னை முஸ்லிமெனச் சொல்லிக் கொள்ள முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவனின் வாக்கு எனப்படும் திருக்குர்ஆனையும், அவனது திருத்தூதரின் நடைமுறையையும் நேர்மைக்கும் உண்மைக்கும் உரை கல்லாகக் கொண்டு, அவற்றிற்கு முரண்பட்டவை அனைத்தையும் தவறானவை, அசத்தியமானவை என்று விட்டு விடுவதுதான் இஸ்லாத்தின் எல்லைக்கோடு! இந்த எல்லைக் கோட்டுக்குள் இருக்கிற மனிதனே முஸ்லிம்! இந்த எல்லைக்கு வெளியே கால் வைத்ததும் மனிதன் இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விடுகிறான். இதற்குப் பிறகு தன்னை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டால் தான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் தன்னையும் உலகத்தையும் ஏமாற்றுகிறான்.

அபுல் அஃலா மெளதூதி


thanks to: read islam,net

0 comments:

Post a Comment