ஒரு அரசு சட்டங்கள் இயற்றும் போதும் திட்டங்கள் தீட்டும் போதும் எந்த மக்களின் நலனிற்காக இவற்றை இயற்றுகிறதோ அந்த மக்களின் இயல்போடு ஒத்துப் போகின்ற வகையில் அந்த சட்டங்களும், திட்டங்களும் இயற்றினால் தான் அது வெற்றி பெறும். இல்லையென்றால் அது வெற்றி பெறாது என்பதற்கு நமது நாட்டில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதுவும் இந்தியாவைப் போல மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, மாநில ரீதியாக, மொழி ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடுகளை அதிகம் கொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் மிகவும் கவனமாக பல ஆய்வுகளின் அடிப்படையில் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான் அது வெற்றி பெறும்.
கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மதச்சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாதவங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருந்தகாரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக 2005ல் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள். இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு, பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்கு, ஏழைமாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது. மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
நாட்டின் முன்னேற்றம் என்பது நாட்டு மக்கள் அனைவரது சமூக – பொருளாதார – கல்வி முன்னேற்றத்தில் தான் அடங்கியுள்ளது. 110 கோடி இந்திய மக்களில் ஏறக்குறைய 25 கோடிமக்களை புறக்கணித்து விட்டுஅல்லது அவர்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. இதைஉணர்ந்த டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்றைய வங்கியியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்கக்கூடிய வட்டியில்லா – வங்கியின் நடைமுறை குறித்து ஆய்வு செய்திட மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஆனந்த் சின்ஹா அவர்களது தலைமையில் ஒரு குழுவை அமைத்தது ரிசர்வ் வங்கி. இந்தக் குழு 2006ல் தந்த அறிக்கையில் இன்றைய சூழலில் தற்போதைய ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட வட்டியில்லா வங்கி இந்தியாவில் அமைப்பது சாத்தியமில்லை என்று அறிக்கை தந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் பொதுவுடமை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூகஇயக்கங்களின் இடைவிடாத பெரும் முயற்சியின் காரணமாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இதில் சிறப்புக் கவனம் எடுத்துள்ளார்கள்.
மலேசியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாபுங் ஹாஜி என்ற நிறுவனம் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. அதாவது ஹஜ்ஜுக்கு செல்ல நிய்யத் செய்தோர் இந்த வங்கியில் பணம் சேமிப்பதற்கான திட்டம் இது முழுக்க ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இது குறித்து ரஹ்மான் கான் கூறுகின்ற போது “இந்த திட்டம் குறித்து பல அறிஞர்களிடமும் உலமாக்களிடமும் கலந்து பேசியதில் அனைவருமே ஆதரவு தெரிவிக்கின்றனர். இது போன்ற நிறுவனத்தை தொடங்கி சோதனை செய்த பிறகு முழுமையான இஸ்லாமிய வங்கியை தொடங்கலாம்” என்றார். அமெரிக்க வங்கிகளில் கோடிக்கணக்கான டாலர்களை போட்டு வைத்திருந்த அரபு நாடுகள், அந்த நாடுகளின் தொழிலதிபர்கள்; செப்.11 தாக்குதலுக்கு பிறகான அரசியல் போக்கின் காரணமாக பெருமளவு பணத்தை திருப்பி எடுத்ததும் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இப்படி திருப்பி கொண்டு வரப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்களை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைத் தேடி வருகின்றார்கள் என்ற செய்தி மத்திய கிழக்கிலிருந்து வரும் பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது. இந்த நேரத்தில் இந்தியா வட்டி இல்லாத வங்கியை தொடங்கினால் இந்த அன்னிய முதலீடு பெருமளவு இந்தியாவில் முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நமது ட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கேரள மாநில அரசு இதற்கான வேலையைத் தொடங்கிவிட்டதை நாம் சென்ற இதழிலேயே செய்தி வெளியிட்டிருந்தோம். மனிதனுக்கு எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்பதை மனிதனால் முடிவு செய்ய இயலாது. மனிதனை படைத்த இறைவனால் தான் முடியும்.
-CMN.SALEEM
source:samooganeethimurasu
--
0 comments:
Post a Comment