Tuesday, November 2, 2010

ஆர்.எஸ்.எஸ். க்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாற்று !


ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகளுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாற்றியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில், மேற்கூறிய குற்றச்சாற்றுக்கள் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் உண்மையான குணாதிசியம் அம்பலமானதாகவும், இந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

நாட்டின் கட்டமைப்பை தகர்க்கும் நோக்குடன் மதவாத மற்றும் தீவிரவாத சக்திகள் எதிலிருந்து உருவெடுத்தாலும், அதற்கு எதிராக என்ன விலை கொடுத்தேனும் காங்கிரஸ் கட்சி போராடும்.

மத துவேஷங்களை பரப்பும் மற்றும் மத அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை தூண்டும் அது போன்ற அனைத்து சக்திகளுக்கு எதிராகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி போராடும் என்று அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட உள்ள தீர்மானங்களில் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment